ஷா ஆலம், பிப் 4– சமையலுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவது மற்றும் வாகனங்களைப் பழுதுபார்ப்பதற்கு சிலாங்கூர் மாநில அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையை பயன்படுத்தவுள்ளதாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா குடியிருப்பாளர்கள் கூறினர்.
வெள்ளத்தில் சேதமடைந்த சலவை இயந்திரத்திற்கு பதிலாக புதிய இயந்திரத்தை வாங்குவதற்கு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த உதவி நிதி துணை புரிந்துள்ளதாக குடியிருப்பாளர்களில் ஒருவரான ஏ.சுரேந்திரன் (வயது 32) கூறினார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/02/surendhar.jpg)
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 வெள்ளி உதவித் தொகையை வழங்கிய சிலாங்கூர் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசிடமிருந்து கூடுதலாக 1,000 வெள்ளியை உதவி நிதியாகப் பெற்றோம். இந்த பணத்தைக் கொண்டு சலவை இயந்திரத்தை வாங்கவிருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
சொந்தமாக வாங்கிய இந்த வீட்டிற்கு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு எங்கள் குடும்பத்தினருக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளாக வசித்த இந்த இடத்திலிருந்து மாற்றலாவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார் அவர்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/02/ros.jpg)
இதனிடையே, மாநில அரசின் இந்த உதவித் நிதியைக் கொண்டு வெள்ளத்தில் சேதமடைந்த தனது இரு கார்களைப் பழுதுபார்க்கவுள்ளதாக இல்லத்தரசியான ரோஸ்மானி முகமது (வயத 43) கூறினார்.
கார்களை பழுதுபார்ப்பதற்கான செலவினம் இந்த தொகையைக் கொண்டு ஈடுகட்ட முடியாத அளவுக்கு அதிகப்பட்சமாக இருக்கும் என்பதை ஒப்புக் கொண்ட அவர், கார் இல்லாத காரணத்தால் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/02/ramli.jpg)
வெள்ள நிவாரண நிதிக்கான விண்ணப்ப முறையை எளிதாக்கிய சிலாங்கூர் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ரம்லி ஷாரில் (வயது 55) குறிப்பிட்டார்.
மாநில அரசின் உதவி நிதியை கடந்த மாதம் தொடக்கத்தில் பெற்றேன். விண்ணப்ப முறை எளிதாகவும் விரைவாகவும் இருந்தது. எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் அளவுக்கு இந்த உதவித் தொகையின் மதிப்பு இல்லாவிட்டாலும் இத்தொகை கிடைத்தமைக்காக நன்றி தெரிவித்துக கொள்கிறேன் என்றார் அவர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் இந்த நிதியுதவி விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் மேலும் சொன்னார்.