ஷா ஆலம் பிப் 7 – தன்னார்வத் தொண்டூழியர்களுக்கான தளமாக சிலாங்கூரை உருவாக்க மாநில அரசு விருப்பம் கொண்டுள்ளது.
அதிக உறுப்பினர்களை ஈர்க்கும் விதமாக குறிப்பிட்ட துறைகளுக்கு ஏற்ப தன்னார்வலர் குழுக்களை அமைக்க தமது தரப்பு திட்டமிட்டுள்ளதாக இளைஞர் மேம்பாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஒத்மான் கூறினார்.
உதாரணத்திற்கு, நாங்கள் ஒரு இசை தன்னார்வ குழுவை உருவாக்குவோம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அத்துறையில் ஆற்றல் உள்ளவர்களைக்கண்டு பிடிப்போம். அதிக ஆர்வத்தை ஈர்ப்பதற்காக நாங்கள் சில குழுக்களை அமைப்போம் என்றார் அவர்.
செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பின் 700 உறுப்பினர்களை அங்கீகரிப்பதற்காக நேற்று இங்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அவர் இவ்வாறு சொன்னார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மலேசியாவுக்கான தன்னார்வக் குழு சேவையை (ஹிட்மாட் உந்தோக் மலேசியா) தொடக்கி வைத்தார்.
செர்வ் அமைப்பு தவிர்த்து டீம் சிலாங்கூர் என்ற மற்றொரு தன்னார்வக் குழுவும் வெள்ளம் போன்ற பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் தீவிரமாக பங்கேற்று வருகிறது.