ஷா ஆலம், பிப் 14- இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நாளை தொடங்கி நடைபெறவுள்ள 2022 ஆசிய குழு நிலையிலான பூப்பந்து போட்டியில் தங்களுக்கு ஆதரவு தர திரண்டு வருமாறு ரசிகர்களை மலேசிய பூப்பந்து வீராங்கனையான எம். தினா கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்போட்டிக்கான உபசரணை நாடாக மலேசியா உள்ளதால் அரங்கில் ரசிகர்கள் வழங்கும் ஆதரவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்குரிய உத்வேகத்தை தங்களுக்கு அளிக்கும் என்று அவர் சொன்னார்.
களத்தில் இருக்கும் எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே, எங்களுக்கு ஆதரவு வழங்க அரங்கிற்கு வருமாறு ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/02/image-8-708x400-1-300x169-1.png)
அனைத்து ஆட்டங்களிலும முழுத்திறனை வெளிப்படுத்தி சிறப்பாக ஆடுவதற்கு எல்லா விளையாட்டாளர்களும் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பயிற்சியின் போது நாங்கள் முடிந்த வரை சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறோம். இந்த போட்டியில் களம் காண்பதற்கு அனைத்து ஆட்டக்காரர்களும் உத்வேகத்துடன் காத்திருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆசிய பூப்பந்துப் போட்டியை ஆசிய பூப்பந்து சங்கம், மலேசிய பூப்பந்து சங்கம் மற்றும் சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் ஆதரவுடன் சிலாங்கூர் அரசு முதன் முறையாக ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டி நாளை தொடங்கி வரும் 20 ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு நடைபெறும்.