ஷா ஆலம், பிப் 15– கிள்ளான், ஜாலான் கெபுன் நெனாஸ் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக வேளாண் திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அத்திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் செந்தோசா சட்டமன்றத் தொகுதி தோட்டக் கலை போட்டியை நடத்தவுள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக சட்டவிரோதமாக குப்பைக் கொட்டும் நடவடிக்கைகளை தடுக்கும் அதேவேளையில் விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம் வட்டார மக்கள் உபரி வருமானத்தைத் பெறுவதற்குரிய வாய்ப்பினையும் ஏற்படுத்த முடியும் என்று தொகுதி செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
நான்கு பிரிவுகளாக நடத்தப்படும் இப்போட்டியில் 60 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அழகிய தோட்டம், கலைநயத்துடன் கூடிய தோட்டம், சுத்தமான தோட்டம் மற்றும் வசீகரிக்கும் வகையிலான அறிவிப்பு பலகைகளை வைத்துள்ள தோட்டம் ஆகியவையே அந்த நான்கு பிரிவுகளாகும் என்றார் அவர்.
போட்டியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகளையும் ஏற்பாடு செய்துள்ளோம் என்றும் அவர் சொன்னார்.
இப்பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாநில அரசின் ஏற்பாட்டில் தொழு உரங்கள் வழங்கப்பட்டதாக கூறிய அவர், இப்பகுதி மக்களுக்கு இத்தகைய இயற்கை உரங்களை வழங்குவது இது மூன்றாவது முறையாகும் என்றார்.