ஷா ஆலம், பிப் 18- எஸ்.எஸ்.பி. எனப்படும் இலக்கவியல் முறையிலான வாகன நிறுத்துமிடக் கட்டண முறைக்கு பொது மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி யூனிட் அமைப்பினால் மேம்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்.எஸ்.பி.) செயலியை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளது இந்த திட்டத்திற்கு கிடைத்து வரும் ஆதரவை புலப்படுத்துவதாக உள்ளது என்று அவர் சொன்னார்.
தற்போது நடப்பிலுள்ள காகித கூப்பன்களுக்கு பதிலாக இந்த இ-கூப்பன் முறை வரும் ஏப்ரல் மாதம் முதல் மாநிலத்திலுள்ள 10 ஊராட்சி மன்றப் பகுதிகளில் அமல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 10 ஆம் தேதி வரை 18 லட்சத்து 90 ஆயிரம் பேர் எஸ்.எஸ்.பி. செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக அண்மையில் சிலாங்கூர் கினி நிருபர்களுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் இங் குறிப்பிட்டார்.
வெகு விரைவில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டி விடும். மலேசியாவில் முதல் நிலை செயலியாக இந்த எஸ்.எஸ்.பி. செயலி விளங்கும் என்று நான் நம்புகிறேன். இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் அமோக ஆதரவு கிடைத்து வருவதை இந்த எண்ணிக்கை உயர்வு காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.
நடப்பிலுள்ள காகித வடிவிலான வாகன நிறுத்துமிடக் கட்டண கூப்பன் முறை கடந்தாண்டு டிம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவிருந்ததாக கூறிய அவர், பொது முடக்கம் காரணமாக பலர் தங்கள் வசமிருந்து கூப்பன்களை பயன்படுத்தி முடிக்காத காரணத்தால் இத்திட்டம் வரு மார்ச் மாதம் ஒத்தி வைக்கப்பட்டது என்றார்.
புறநகர்ப் பகுதிகளான சபாக் பெர்ணம் மற்றும் உலு சிலாங்கூரில் இந்த எஸ்.எஸ்.பி செயலி முறை அமல்படுத்தப்படவில்லை. இவ்விரு பகுதிகளிலும் கார் நிறுத்துமிட வசதி இன்னும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இந்த இலக்கவியல் கார் நிறுத்துமிடத் திட்டத்தை இவ்விரு இடங்களில் எதிர்காலத்தில் அமல்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.