ஷா ஆலம், பிப் 21- இங்கு நேற்று நடைபெற்ற குழு நிலையிலான ஆசிய பூப்பந்துப் போட்டியில் மலேசியா முதன் முறையாக வெற்றியாளர் கிண்ணத்தை வாகை சூடியதை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
நாட்டின் இரண்டாவது ஒன்றையர் ஆட்டக்கார்ர் இங் ஸீ யோங் வெற்றிப் புள்ளியைப் பெற்ற அடுத்த கணம் இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் (எஸ்.ஏ.சி.சி.) கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆர்ப்பரித்ததோடு “ஐ லவ் யூ“ மலேசியா என கோஷமிட்டதையும் காண முடிந்தது.
மாநாட்டு மையத்தின் உள்ளேயும் வெளியிலும் வைக்கப்பட்டிருந்த ராட்சத திரைகள் வாயிலாக ரசிகர்கள் இந்த இறுதியாட்டத்தைக் கண்டு களித்ததாக இந்த போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
சிலாங்கூர் மாநில விளையாட்டுத் துறைக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விஷயம் இதுவாகும். ஈராண்டு கால இடைவெளிக்குப் பின்னர் அனைத்துலக நிலையிலான போட்டியை நடத்தும் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது என்றார் அவர்.
ஆசிய வெற்றியாளராக மலேசியா முதன் முறையாக தேர்வு பெற்றுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் போட்டியை சிலாங்கூர் ஏற்று நடத்தியது அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த 15 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்களுக்கு நடைபெற்ற இந்தப் போட்டியை சிலாங்கூர் அரசுடன் இணைந்து அதன் துணை நிறுவனங்களான மந்திரி புசார் கழகம் (எம்.பி.ஐ.) மற்றும் இன்வெஸ்ட் சிலாங்கூர் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.