ஷா ஆலம், பிப் 24- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 10,000 பேர் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் இன்று 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெறுகின்றனர். கெமுனிங் உத்தாமா எம்.பி.எஸ்.ஏ. மண்டபம், டேவான் ஸ்ரீ கெராயோங், பண்டமாரான் விளையாட்டரங்கம், காப்பார், டி.என்பி. மண்டபம் ஆகிய இடங்களில் இந்நிதி வழங்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார். பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் இன்று வரை 55,654 பேர் 5 கோடியே 56 லட்சத்து 54 ஆயிரம் வெள்ளியை வெள்ள உதவி நிதியாகப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தங்களுக்கான உதவி நிதியை வங்கிக் கணக்கில் சேர்க்க விரும்புவோர் https://www.selangor.gov.my/klang.php/database_stores/form/28 எனும் அகப்பக்கம் வாயிலாக தங்கள் விபரங்களை பதிவிடலாம் என அவர் சொன்னார்.