கோலாலம்பூர், பிப், 27- கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றவர்கள் கடுமையான அல்லது தொடர்ச்சியான பக்க விளைவுகளை எதிர்நோக்கும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தடுப்பூசியினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளுக்கு உடனடியாகச் சிகிச்சை பெறுவதன் மூலம் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கவும் இதன் தொடர்பான விசாரணைக்குத் தேவையான விபரங்களைப் பெறவும் இயலும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
தடுப்பூசி பெற்ற பின்னர் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்துத் தெரிவிக்க நான்கு வழிகள் உள்ளதாக அவர் சொன்னார்.
கடுமையான பாதிப்பை எதிர் கொள்ளாதவர்கள் மைசெஜாத்ரா செயலியில் பதிவிடலாம் என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இது தவிர, தேசிய ஒழுங்கு முறை பிரிவின் அகப்பக்கத்தில் இயங்கலை வாயிலாக அல்லது அந்த பிரிவின் அகப்பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பாரத்தை பூர்த்தி செய்வதன் மூலமாகவும் தங்கள் உடல் நிலை குறித்த தகவலைத் தெரிவிக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.