கோலாலம்பூர், மார்ச் 4- திரங்கானு மற்றும் கிளந்தான் மாநிலங்களில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது. திரங்கானுவில் நேற்றிரவு 8 மணிக்கு 1,276 குடும்பங்களைச் சேர்ந்த 5,128 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்தனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 808 குடும்பங்களைச் சேர்ந்த 2,846 பேராக அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது, உலு திரங்கானு மற்றும் டுங்கனில் 16 துயர் துடைப்பு மையங்கள் மட்டுமே செயல்படுகின்றன. உலு திரங்கானுவில் 2,538 பேரும், டுங்குனில் 308 பேரும் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறங்கு முகமாக உள்ளது. இங்கு 1,506 குடும்பங்களைச் சேர்ந்த 4,715 பேர் பாசிர் மாஸ் மற்றும் தும்பாட் மாவட்டங்களில் உள்ள 17 துயர் துடைப்பு மைமங்களில் தங்கியுள்ளனர். நேற்றிரவு 1,525 குடும்பங்களைச் சேர்ந்த 4,809 பேர் அம்மையங்களில் தஙகியிருந்தனர்.