காஜாங், மார்ச் 27- கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கும் கோவிட் -19 நோய்ப் பரவுவலைத் தடுப்பதற்கும் ஏதுவாக ஊராட்சி மன்றங்களின் அதிகாரிகள் இவ்வாண்டு அதிக ரமலான் சந்தைகளைத் திறந்துள்ளனர்.
ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின்னர் எண்டமிக் கட்டத்திற்கு நாடு மாறுவது தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிடுவதற்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
காலை சந்தை உட்பட பல பொருளாதார துறைகளை திறப்பதற்கான வழிகளை நாங்கள் ஏற்கனவே விவாதித்துள்ளோம். அவ்விடங்களில் தனித்தனி நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளையும் அமைத்துள்ளோம் என்று அவர் சொன்னார்.
கூடுதல் கடைகளை மட்டுமின்றி சந்தைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்பதை கடந்த கால அனுபவங்களின் வழி அறிந்துள்ளோம். இதன் மூலம் மக்களுக்கு அதிக தேர்வுகள் இருக்கும். சந்தைகளில் கூட்ட நெரிசலையும் தவிர்க்க முடியும் என்றார் அவர்.
பைத்துர் ரஹ்மான் ஆலம் சாரி பள்ளிவாசல் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாநிலத்தில் 238 ரமலான் சந்தைகளில் மொத்தம் 11,967 கடை லாட்டுகள் இந்த ஆண்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் முன்னதாக கூறியிருந்தார்.
அடுத்த வாரம் நாடு எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்திற்கு மாறும் நிலையில் சிலாங்கூரில் சிறார்கள் மத்தியில் தடுப்பூசி விகிதத்தை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வரும் என்று அமிருடின் குறிப்பிட்டார்.
இந்நடவடிக்கையின் மூலம் நோய்த்தொற்றின் அபாயத்தையும் இறப்புகளின் எண்ணிக்கையையும் குறைக்க உதவும் என்று அவர் கூறினார்.
இதன் பிறகு, மாணவர்களிடையே கோவிட்-19 பரவலை நாங்கள் கண்காணிப்போம். சிறார்கள் மத்தியில் பெறுவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது மற்றும் பலர் இன்னும் தடுப்பூசி பெறாதது கவலையளிப்பதாக உள்ளது என்றார் அவர்.