ஷா ஆலம், மே 2- சுங்கை காபூல் ஆற்றில் டீசல் கலப்பதை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் விரைந்து தடுத்ததன் மூலம் சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகளை நிறுத்தும் சூழல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
நீரோட்டப் பகுதியில் டீசல் எண்ணெயை வாடையை அகற்றும் விதமாக இரு மூட்டை கார்பன் எனப்படும் கரித் துகள்கள் வைக்கப்பட்டதோடு எண்ணெய் தடுப்பு மிதவையும் பொருத்தப்பட்டதாக சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
அதே சமயம், சுங்கை காபூலில் இரு எண்ணெய்த் தடுப்பு மிதவைகளும் ஏழு மூட்டை கரித் துகள்களும் வைக்கப்பட்டன என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
நீரில் மாசுபாடு ஏற்படுவதைத் தடுப்பதற்காக லுவாஸ் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்துடன் இணைந்து தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் அணுக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த மாசுபாடு தணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.
கடந்த வெள்ளிக்கிழமை சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மைய முகத்துவாரப் பகுதியில் டீசல் போன்ற எண்ணெய் வாடை உணரப்பட்டதைத் தொடந்து லுவாஸ் நிறுவனம் தீவிர சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
நீர் மாசுபாட்டுச் சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக தமது தரப்பு ஆயர் சிலாங்கூர் நிறுவனத்துடன் இணைந்து தீவிர கண்காணிப்பு பணிகளை செமினி ஆற்றில் மேற்கொண்டு வருவதாக லுவாஸ் நிறுவனம் கூறியது.