கோலாலம்பூர், மே 2- மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வார காலத்தில் 15 விழுக்காடு குறைந்துள்ளது.
கடநத் ஏப்ரல் 24 முதல் 30 வரையிலான 17 ஆவது நோய்த் தொற்று வாரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு 15 விழுக்காடு என்ற அளவில் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
ஒன்றாவது நோய்த் தொற்று வாரத்திலிருந்து 17வது நோய்த் தொற்று வாரம் வரையிலான காலக்கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் ஒரு லட்சம் பேருக்கு 20 விழுக்காடாக குறைந்துள்ளது என்று அவர் சொன்னார்.
பதினாறாவது நோய்த் தொற்று வாரத்துடன் ஒப்பிடுகையில் 17 வது நோய்த் தொற்று வாரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட பாதிப்பு கொண்ட நோயாளிகள் எண்ணிக்கை 33 விழுக்காடாக குறைந்த வேளையில் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட பாதிப்பைக் கொண்டவர்கள் எண்ணிக்கையில் மாற்றமில்லை என்று அவர் தெரிவித்தார்.
16 ஆவது நோய்த் தொற்று வாரத்துடன் ஒப்பிடுகையில் 17 ஆவது நோய்த் தொற்று வாரத்தில் ஐ.சி.யு. எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லாத வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை 22 விழுக்காடும் ஐ.சி.யு. வார்டுகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 விழுக்காடும் வீழ்ச்சி கண்டது என்றார் அவர்.
கோவிட்-19 மதிப்பீட்டு மையங்கள் (சி.ஏ.சி.) வாயிலாக நாட்டில் கோவிட்-19 நிலவரங்கள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், கடந்த 16 மற்றும் 17 ஆவது நோய்த் தொற்று வாரங்களில் சி.ஏ.சி. மையங்களுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 37.1 விழுக்காடு குறைந்துள்ளது என்றார்.