கோலாலம்பூர், மே 4- உள்ளூர் ஆடவர் ஒருவர் நெற்றியில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இங்குள்ள ஹோட்டல் அறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். நேற்று மாலை புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கிய அந்த ஆடவர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் எஸ்.ஏ.சி. ஹபிபி மஸின்ஜி கூறினார். இச்சம்பவம் குறித்து அறிந்த ஹோட்டல் பணியாளர் இரவு 7.00 மணியளவில் போலீசாருக்கு தகவல் அளித்ததாக அவர் மேலும் சொன்னார். ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவரான அந்த 46 வயது ஆடவர் மாலை 6.00 மணியளவில் அந்த ஹோட்டலுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் அந்த ஆடவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நபர் ஒருவரை விசாரணைக்காக தாங்கள் தடுத்து வைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இன்னும் கைப்பற்றப்படவில்லை எனக் கூறிய அவர், கொலைக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகச் சொன்னார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/04/polis-grafik-3.jpg)