ஷா ஆலம், மே 13- இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனத்தின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்டார். இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த உபசரிப்பு நிகழ்வில் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம், ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான், இளம் தலைமுறை மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஒத்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த விருந்து நிகழ்வில் பல்வேறு அரசு இலாகாக்களை சேர்ந்தவர்கள், பிரமுகர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், முதலீட்டாளர்கள் உள்பட 1,500 பேர் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 21ஆம் தேதி வரை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று அமிருடின் கூறியிருந்தார்.