ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENT

கடும் நோயினால் பாதிக்கப்பட்ட பத்து பேருக்கு பெக்காவானிஸ், ஸ்ரீ செத்தியா தொகுதி நிதியுதவி

ஷா ஆலம், மே 26- ஸ்ரீ செத்தியா தொகுதியைச் சேர்ந்த கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட பத்து பேருக்கு பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளிர் சமூக நல அமைப்பின் ஒத்துழைப்புடன் சட்டமன்ற உறுப்பினர் உதவி வழங்கினார்.

ஜியாரா மெடிக் திட்டத்தின் ஒரு பகுதியாக தன் துணைவியார் சுஹாத்தி ரிட்டுவானுடன் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ரொக்கத் தொகை மற்றும் உதவிப் பொருள்களை வழங்கியதாக சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

இந்த உதவித் திட்டத்தை அமல்படுத்திய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது தலைமையிலான பெக்காவானிஸ் அமைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

ஜியாரா மெடிக் பெக்காவானிஸ் திட்டத்தின் கீழ் 44 தொகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்க பெக்காவானிஸ் அமைப்பு கடந்தாண்டு 220,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நோயாளிக்கும் 250 வெள்ளி வழங்கப்படுகிறது. மருந்துகள் வாங்குவதில் அவர்கள் எதிர்நோக்கும் சிரமத்தை குறைக்கும் நோக்கில் இந்நிதி வழங்கப்படுகிறது.


Pengarang :