கோலாலம்பூர், மே 27- வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரை இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்கு மலேசியா தகுதி பெற்றுள்ளது.
உபசரணை நாடு என்ற முறையில் உலகக் கிண்ணப் போட்டிக்கு இயல்பாக தேர்வு பெறும் தகுதியை பெற்றுள்ள இந்தியா நேற்றைய ஆட்டத்தில் இந்தோனேசிய அணியை 16-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்து ஜாகர்த்தாவில் நடைபெறும் 2022 ஆசிய கிண்ணப் போட்டியின் சூப்பர் 4 அணியில் இடம் பெற்றதைத் தொடர்ந்து மலேசியாவுக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.
இதன் வழி சூப்பர் 4 குழுவில் இடம் பெற்றுள்ள இதர மூன்று குழுக்களும் இயல்பாக உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த வெற்றியின் வழி இந்திய அணி நான்கு புள்ளிகளுடன் ஏ பிரிவில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. ஒன்பது புள்ளிகளுடன் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.
பயிற்றுநர் ஏ. அருள் செல்வராஜ் தலைமையிலான மலேசிய ஹாக்கி அணி ஓமான், தென் கொரியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளை தொடர்ச்சியாக தோற்கடித்ததன் வழி பி பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
பி பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள தென் கொரியாவுடன் மலேசியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் சூப்பர் 4 குழுவுக்கு தேர்வாகியுள்ளன.