ஷா ஆலம், ஜூலை 13- இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் நடைபெறவுள்ள இலக்கவியல் மேம்பாட்டுப் பயிற்சி மாநிலம் முழுவதும் உள்ள வணிகர்கள் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு பல்வேறு அனுகூலங்களை வழங்கும்.
மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களின் ஆதரவுடன் நடத்தப்படும் இப்பயிற்சியில் இலக்கவியல் வணிகம் தொடர்பான அடிப்படை நுணுக்கங்களை வணிகர்கள் இலவசமாக கற்றுக் கொள்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று பிளாட்பார்ம் சிலாங்கூர் (பிளாட்ஸ்) ஒருங்கிணைப்பாளர் அஜிசுல் ஹூசேன் ஜைனால் அபிடின் கூறினார்.
இது தவிர, ஊராட்சி மன்றங்களிடமிருந்து வர்த்தக லைசென்ஸ் பெறுவது, ரொக்கமில்லா கட்டண முறை மற்றும் இணையம் வாயிலாக ஆடர்களை கொடுப்பது உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதற்குரிய வாய்ப்பு இப்பயிற்சியில் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜூன் மாதம் வரை 12,234 வணிகர்களும் அங்காடி வியாபாரிகளும் தங்களின் வர்த்தக விரிவாக்கத்திற்காக இந்த தளத்தில் பங்கேற்றுள்ளனர் என்று அவர் சொன்னார்.
இயக்கவியல் முறைக்கு மாறும் வணிகர்களுக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது என்பதால் இத்திட்டத்தில் பங்கேற்கும் வணிகர்களின் எண்ணிக்கை பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது பிளாட்ஸ் திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து வணிகர்களும் உணவு மற்றும் பான விற்பனைத் துறையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவ்வாண்டு இறுதிக்குள் பிளாட்ஸ் திட்டத்தில் இணையும் வர்த்தகர்களின் எண்ணிக்கையை 20,000 ஆக உயர்த்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.