பெட்டாலிங் ஜெயா, ஜூலை 16- உள்நாட்டு இலக்கியப் படைப்புகளின் முக்கியத்துவத்தை இளையோர் மத்தியில் வலியுறுத்துவதில் தீவிர கவனம் செலுத்தும்படி அரசாங்கத் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தரமான இலக்கியப் படைப்புகள் குறிப்பாக உள்நாட்டு இலக்கியவாதிகளின் எழுத்துப் படிவங்கள் இளையோரிடம் கொண்டுச் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இலக்கியப் படைப்புகளுடன் இளையோருக்கு தொடர்பு இல்லாமல் போவது இளைய தலைமுறையினரின் குற்றமல்ல. மாறாக, அந்தப் பணியை முறையாகச் செய்யத் தவறிய நாட்டின் கல்வி முறை மற்றும் தலைவர்களின் குற்றமாகும் என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு இங்குள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்ற இலக்கியவாதிகள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இலக்கிய உலகிற்கு அரும் பணியாற்றியவர்களுக்கு சிலாங்கூர் இலக்கிய விருதை வழங்குவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாக கூறியிருந்தார்.