பெட்டாலிங்ஜெயா- 24 ஜூலை - மாநில அரசின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் சிலாங்கூர் பென்யாயாங் பயணத் தொடரின் இரண்டாம் கட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சமூக நலன், குடும்பம், வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்ட இந்த திட்டம் கிள்ளான், சபாக் பெர்ணம், சிப்பாங் மற்றும் உலு சிலாங்கூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார். இந்த இரண்டாம் கட்ட நிகழ்வானது தற்போதைய சிலாங்கூர் பென்யாயாங் பயணத் தொடரின் தொடர்ச்சியாகும். இது இன்று பெட்டாலிங்கில் உள்ள டத்தாரான் போலவார்டில் நடைபெறும் வேளையில் ஜூலை 31 கோம்பாக்கின் பத்து கேவ்ஸ் பொது திடலில் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதற்கு முன் நாங்கள் உலு லங்காட், கோல லங்காட் மற்றும் கோல சிலாங்கூர் மாவட்டங்களிலும் இதே திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம் என்று இன்று டிவி3 இல் ஒளிபரப்பான மலேசியா ஹரி இனி நிகழ்ச்சியில் அவர் கூறினார். இன்று பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் டத்தாரான் போலவர்டில் நடைபெறும் இந்த ஜெலாஜா சிலாங்கூர் திட்டத்திற்கு அமிருடின் தலைமையேற்கிறார். காலை 8.00 மணிக்குத் தொடங்கும் இத்திட்டம் மாலை 5.30 மணி வரை நடைபெறும். மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக அதிகமான மக்கள் பயனடைவதற்காக 35 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.