பத்து பகாட், ஆக 14– வீட்டிற்கு அருகிலுள்ள செம்பனைத் தோட்டத்திற்கு சென்ற மூதாட்டியை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இங்குள்ள செங்கேராங், கம்போங் பாரிட் காசே சாயாங்கில் கடந்த புதன் கிழமை நிகழ்ந்ததாக பத்து பகாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி இஸ்மாயில் டோலா கூறினார்.
பைனா சிவான் (வயது 79) என்ற அந்த மூதாட்டி காணாமல் போனது தொடர்பில் தாங்கள் கடந்த புதன் கிழமை இரவு 11.00 மணியளவில் புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.
அன்றைய தினம் மாலை 3.30 மணியளவில் தோட்டத்திற்கு சென்ற தன் தாயார் இரவாகியும் வீடு திரும்பவில்லை என அவரின் மகன் தனது புகாரில் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பைனாவின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து போலீசார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும் அவரை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை என்று இஸ்மாயில் குறிப்பிட்டார்.
அந்த மூதாட்டியை தேடி மீட்கும் நடவடிக்கை மேலும் தீவிரமாகவும் விரிவான வகையிலும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
இந்த தேடுதல் நடவடிக்கையில் போலீஸ், பொது நடவடிக்கைப் பிரிவு, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, பொது தற்காப்புத் துறை, ரேலா ஆகியவற்றை உள்ளடக்கிய 187 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.