ECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

மது போதையில் மகளின் தலையை மிதித்து காயப்படுத்திய ஆடவர் கைது

கோலாலம்பூர், ஆக 19- தனது 16 வயது மகளை கன்னத்தில் அறைந்து தலையில் மிதித்தும் காயப்படுத்திய வேலையில்லா நபரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் இங்குள்ள அம்பாங், தாமான் சாகாவிலுள்ள வீடொன்றில் நேற்று காலை நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பாரூக் ஏஷாக் கூறினார்.

மது அருந்தியிருந்ததாக நம்பப்படும் அந்த 50 வயது ஆடவர் பணம் கேட்டு தன் மனைவியைத் தொல்லைப்படுத்தி வந்ததாக அவர் சொன்னார்.

மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் பணம் பெற்று வரும்படி அந்த ஆடவர் தன் மனைவியை நச்சரித்துள்ளார். எனினும் அம்மாது மறுக்கவே  சினமடைந்த அந்நபர், அவரின் கூந்தலைப் பிடித்து இழுத்துள்ளார்.

பின்னர், தன் மகளை அழைத்து “உன் தாயாருடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று பணம் பெற்று வா“  என அவ்வாடவர் கூறியுள்ளார். அதற்கு மகளும் முடியாது எனக் கூறவே, வெகுண்டெழுந்த அவ்வாடவர்  மகள் என்றும் பாராமல் அவரை கன்னத்தில் அறைந்ததோடு தலையிலும்  மிதித்துள்ளார் என்று முகமது பாரூக் சொன்னார்.

காயங்களுக்குள்ளான அந்த 16 வயது பெண் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறிய அவர், அந்த ஆடவர் மீது போதைப் பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில்  மூன்று குற்றப்பதிவுகள் உள்ளன என்றார்.

 


Pengarang :