கோலாலம்பூர், ஆக 27- டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு எதிரான ஊழல் வழக்கின் தீர்ப்பு எனக் கூறப்படும் ஆவணத்தை வெளியிட்ட இணைய செய்தி ஊடகத்திற்கு எதிராக கூட்டரசு நீதிமன்ற பதிவதிகாரி அலுவலம் போலீசில் புகார் செய்துள்ளது.
“ரோஸ்மா மன்சோர் குற்றவாளி என வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படுவார். ரோஸ்மா மன்சோருக்கு எதிரான 71 பக்கத் தீர்ப்பை இங்கு பார்வையிடலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம்“ என்ற தலைப்பிலான அந்த இணைய ஏட்டின் செய்தி தொடர்பில் இப்புகார் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றப் பதிவகம் அறிக்கை ஒன்றில் கூறியது.
நீதிமன்றம் நிர்வாகம் மற்றும் அதன் நடவடிக்கையை கீழறுக்கும் வகையில் வேண்டுமென்றே இச்செயல் புரியப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட அந்த இணைய ஊடகத்திற்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது என அது தெரிவித்தது.
நாட்டின் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் புரியப்பட்ட இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளால் நீதித்துறை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என அவ்வறிக்கை மேலும் குறிப்பிட்டது.
சரவா மாநிலத்திலுள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு சோலார் ஒளியீர்ப்பு தகடுகளைப் பொருத்துவதற்கான 125 கோடி வெள்ளி திட்டத்தில் ஊழல் புரிந்ததாக ரோஸ்மா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் உயர் நீதிமன்றம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது.