கிள்ளான், ஆக 30- காதலியைப் படுகொலை செய்ததாக மெக்கானிக் ஒருவருக்கு எதிராக இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிமன்றத்தில் தமக்கெதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதனைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக அமிருள் அமின் அமிருடின் (வயது 19) என்ற அந்த இளைஞர் தலைமையை அசைத்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
இம்மாதம் 24 ஆம் தேதி கிள்ளான், கம்போங் ஸ்ரீ பண்டான், ரோரோங் ஹாஜி மாஹாட்டில் உள்ள வீடொன்றில் நுருள் சஹிரா அப்துல்லா (வயது 24) என்பவரை படுகொலை செய்ததாக அமிருள் மீது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரணத் தண்டனை வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் முகமது அனிஸ் ஜூல்கப்ளி இந்த வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் முகமது நோராஸிஹான் மற்றும் அல்திஹா சுராயா ரஹ்மாட் ஆகியோர் வாதாடுகின்றனர்.