ஷா ஆலம், செப் 10- சிலாங்கூர் மாநில அரசினால் அமல்படுத்தப்பட்ட “ஸ்கிம் பெடுலி ஜன்தோங்“ திட்டத்தின் கீழ் இருதய நோயாளிகள் ஐம்பதாயிரம் வெள்ளி வரை சிகிச்சைக்கான நிதியுதவியைப் பெறலாம்.
மாதம் 8,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் மற்றும் சிலாங்கூரில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் பி40 மற்றும் எம்40 தரப்பைச் சேர்ந்த மலேசிய பிரஜைகள் இந்த நிதியுதவியைப் பெறலாம் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
செல்கேர் மேனேஜ்மெண்ட் சென். பெர்ஹாட் (செல்கேர்) நிறுவனத்தின் வாயிலாக இதற்கான விண்ணப்பத்தைச் செய்யலாம். ஐ.ஜே.என். எனப்படும் தேசிய இருதய கழகத்தில் சிகிச்சை பெறுவோருக்கு உத்தரவாதக் கடிதங்களை செல்கேர் வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த இருதய சிகிச்சை திட்டத்திற்கு மாநில அரசு பி.கே.என்.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 257 நோயாளிகள் 40 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை உதவித் தொகையாக பெற்றுள்ளனர்.