ECONOMYMEDIA STATEMENT

கம்போங் பத்து 4, சுகாதார கிளினிக்கில் தீவிபத்து

ஷா ஆலம், செப் 22-  பாரிட் பாரு சுகாதார கிளினிக்கில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் நேற்று மாலை சபாக் பெர்ணம், செபிந்தாஸ் கம்போங் பத்து 4இல் உள்ள மற்றொரு சுகாதார கிளினிக்  தீவிபத்தில் சேதமடைந்தது.

இத்தீவிபத்து குறித்த தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சபாக் பெர்ணம் மற்றும் சுங்கை பெசார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 13 வீரர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிசை மேற்கோள் காட்டி ஹரியான் மெட்ரோ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவ இடத்தை அடைந்த போது தீ கொழுந்து விட்டு எரிவதையும் மரத்திலான அந்த கிளினிக்கின் 60 சதவீதம் அழிந்து விட்டதையும் கண்டோம்.

தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு மாலை 5.46 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டது என்று நோராஸாம் கூறினார்.

இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த கிளினிக்கில் பணியில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் காயமின்றி உயிர்த் தப்பியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அதிகாலை 3.49 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் சபாக் பெர்ணம், ஜாலான் மஸ்ஜிட் பாரிட் பாருவில் உள்ள பாரிட் பாரு சுகாதார கிளினிக்  நாசமானது.


Pengarang :