ரெம்பாவ், அக் 2- மலேசியாவிற்கு 218 நோய்த்தடுப்பு நிபுணர்கள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது போல் சுகாதார பாதுகாப்பு மற்றும் ஆரம்ப சுகாதாரத்தின் முக்கிய அங்கமாக இது விளங்குவதாக அவர் சொன்னார் .
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் மொத்தம் 70 நோய்த்தடுப்பு நிபுணர்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். மலேசியாவில் மொத்தம் 150,000 வயது வந்த நோயாளிகளுக்கு நோய்த்தடுப்பு சிகிச்சை தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நோய்த்தடுப்புச் சேவைகள் வளர்ச்சியடைந்திருந்தாலும் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் 10-15 விழுக்காட்டினருக்கு மட்டுமே சுகாதார அமைச்சினால் மருத்துவ சேவையை வழங்க முடிகிறது என்று அவர் தெரிவித்தார். தற்போதைக்கு நாட்டில் 19 நோய்த் தடுப்பு நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் 32 பயிற்சி மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றர் என்று ரெம்பாவ் மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு உலக நல்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு தினத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் கூறினார்.
சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஹர்ஜீத் சிங், சுகாதாரத் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மற்றும் தேசிய நோய்த்தடுப்பு சேவைகள் தலைவர் டாக்டர் ரிச்சர்ட் லிம் பூன் லியோங் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஹீலிங் ஹார்ட்ஸ் மற்றும் சமூகங்கள் என்ற கருப்பொருள் கொண்ட இந்த நிகழ்வானது, நோயாளிகளுடன் பழகும் போது மற்றும் நேசிப்பவரின் இழப்பிற்குப் பிந்தைய கட்டத்தின் போது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்திற்கான மீட்பு மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை நோக்கமாகக் கொண்டது என்று கைரி கூறினார்.