கிள்ளான், அக் 2- இம்மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்து தீகா தொகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 600 இந்திய குடும்பத்தினர், 100 வெள்ளி மதிப்புள்ள ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெறவுள்ளனர். இந்த பற்றுச் சீட்டுகள் கோத்தா கெமுனிங்கில் உள்ள ஜயண்ட் பேரங்காடியில் அடுத்த வாரம் விநியோகம் செய்யப்படும் என தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்தார். மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் கால ஜோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ் 400 பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும் வேளையில் எஞ்சிய 200 பற்றுச் சீட்டுகள் மாநில சட்டமன்றத்தின் ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படுகின்றன என்று அவர் சொன்னார். குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதியை வழங்குகிறோம் என்றார் அவர். நேற்று இங்குள்ள கம்போங் குவாந்தானில் நடைபெற்ற ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் கூறினார். மக்கள் நலன் மற்றும் நல்வாழ்வைக் காக்கும் நீண்ட கால முயற்சியாக குறைந்த வருமானம் பெறும் பிரிவினரை இலக்காகக் கொண்டு பெருநாள் கால ஜோம் ஷோப்பிங் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜோம் ஷோப்பிங் திட்டத்திற்காக மொத்தம் 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 33 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி நோன்புப் பெருநாளுக்கு செலவிடப்பட்டது.