கோல சிலாங்கூர், அக் 7- சமூக ஊடகங்களில் வரம்பு மீறி கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் வெளியிடப்படுவது குறித்து சிலாங்கூர் சுல்தான் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
நெட்டிசன்கள் எனப்படும் வலைத்தளவாசிகள் வெளியிடும் கருத்துகள் அவதூறானவையாகவும், தரக்குறைவான வார்த்தைகளைக் கொண்டவையாகவும் வன்மம் நிறைந்தவையாகவும் உள்ளதாக சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கூறினார்.
இத்தகைய மோசமான கருத்துகளை சிறிதும் ஆராயாமல் மற்ற நெட்டிசன்கள் ஆதரிப்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. இத்தகைய செயல்களை தொடர்ந்து கண்காணித்து தடுக்காவிட்டால் அச்செயல் சமுதாயத்தை குறிப்பாக இளம் தலைமுறையினரை பாழ்படுத்தி விடும் என அவர் எச்சரித்தார்.
சமுதாயத்தில் உள்ள சில தரப்பினரிடையே பதட்டம் ஏற்படும் அளவுக்கு இத்தகைய நிந்தனையான மற்றும் பொய்யான செய்திகள் பரவலாக வெளிவந்த வண்ணம் உள்ளன என்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் நல்லிணத்திற்கும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய இத்தகைய செயல்கள் தொடர்வதை தாம் அனுமதிக்க முடியாது என்று நேற்று இங்கு லுமு அரச பள்ளிவாசலை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் சொன்னார்.
அடுத்த தலைமுறையினரின் நலன் காக்கப்படுவதற்கு மலாய்க்காரர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.