கோலாலம்பூர், அக் 8- நாட்டிலிருந்து தப்பியோடிய தொழிலதிபர் லோ தேக் ஜோ அல்லது ஜோ லோவை மலேசியாவுக்கு திரும்ப வரவைப்பதற்கான தந்திரமாக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் இருந்து அவரின் பெயரை நீக்கியதாக தேசிய போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானியை மேற்கோள் காட்டி வெளியான செய்தியை அரச மலேசிய போலீஸ் படை (பி.டி.ஆர்.எம்.) மறுத்துள்ளது.
போர்னியோகோஸ்டின் டிவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட அக்கூற்று பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பொறுப்பற்ற முறையில் வெளியான போலிச் செய்தியாகும் என்று பி.டி.ஆர்.எம். செயலாளர் டத்தோ நூர்சியா முகமட் சாதுடின் கூறினார்.
இணைய வசதிகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக குற்றவியல் புலனாய்வு பிரிவு, வழக்கு மற்றும் சட்டப் பிரிவு (டி5), புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை ஆகியவை தண்டனைச் சட்டம் (அவதூறு) பிரிவு 500 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 இன் பிரிவு 233 (முறையற்ற பயன்பாடு) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றன என அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
சமூக ஊடகங்களை விவேகத்துடன் பயன்படுத்தும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட நோர்ஷியா, பொது ஒழுங்கிற்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.