கோம்பாக், அக் 11- சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதில்லை என்ற முடிவை அறிவிப்பதற்காக மேன்மை தங்கிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை மந்திரி புசார் இன்று சந்திக்கவுள்ளார்.
வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தை அலட்சியப்படுத்தக் கூடாது என்ற பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் நிலைப்பாட்டிற்கேற்ப மாநில சட்டமன்றத்தை கலைப்பதில்லை என முன்பு எடுக்கப்பட்ட முடிவில் மாநில அரசு உறுதியாக உள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
நாளை நான் சுல்தான் அவர்களைச் சந்திக்கவிருக்கிறேன். அவருடனான சந்திப்புக்கு பிறகு எந்த முடிவும் இறுதி செய்யப்படும் என செலாயாங் பாருவில் நேற்று நடைபெற்ற இல்திஸாம் சிலாங்கூர் பெருவிழாவில் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
ஆண்டு இறுதியில் வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தை பக்கத்தான் ஹராப்பான் அலட்சியப்படுத்த விரும்பவில்லை என்பதோடு அப்பேரிடரை எதிர்கொள்வதில் கவனம் செலுத்த அது விரும்புவதாக மாநில ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.
மேன்மை தங்கிய சுல்தான் மக்கள் மீது பரிவு கொண்டவர் என்பதோடு எப்போதும் போல் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் மாநில அரசு அவரின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ளும் என்றும் அமிருடின் கூறினார்.
பதினான்காவது நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோ நேற்று தொலைக்காட்சி வழி மக்களுக்கு ஆற்றிய உரையில் வெளியிட்டார்.