ஷா ஆலம், அக் 12- இன்று காலை பெய்த அடைமழை காரணமாக நான்கு முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் ஆபத்தான மற்றும் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆறுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
கோல சிலாங்கூர் மாவட்டத்தின் சுங்கை சிலாங்கூர் ஆறு மற்றும் சிப்பாங் மாவட்டத்தின் சுங்கை லாபு ஆறு அபாயக் கட்டத்தை எட்டியுள்ள வேளையில் கிள்ளான் மாவட்டத்தின் கிள்ளான் ஆறு மற்றும் உலு லங்காட் மாவட்டத்தின் பெரானாங் ஆறு ஆகிய எச்சரிக்கை அளவைத் தொட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இன்று காலை சிலாங்கூரில் பெய்த மழை கடுமையானதாகவும் மணிக்கு 31-60 மீல்லி மீட்டர் வரையிலும் இருந்ததாக அவர் சொன்னார்.
சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை லாபு ஆகியவற்றில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியுள்ள வேளையில் சுங்கை கிள்ளான் மற்றும் சுங்கை பெரானாங்கில் எச்சரிக்கை அளவைத் தொட்டுள்ளது என்றார் அவர்.
பொதுமக்கள் குறிப்பாக ஆறுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் அதே வேளையில் வெள்ளம் தொடர்பான மேல் விபரங்களை https://publicbinfobanjir.water.com.my என்ற அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.