ஷா ஆலம், அக் 16- பல்வேறு குற்றங்களுக்கான அபராதத் தொகையில் 70 விழுக்காடு வரை கழிவை வழங்கும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் சலுகையை முறையாக பயன்படுத்திக் கொள்ளும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இது தவிர, ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 22ஆம் ஆண்டு நிறைவையொட்டி இம்மாதம் தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை கார் நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதத்தில் 10 ரிங்கிட் தள்ளுபடி சலுகை வழங்கப்படுவதாக மாநகர் மன்றத்தின் துணை டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் கூறினார்.
குறிப்பிட்ட சில குற்றங்கள் மற்றும் வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கான சம்மன்களை கொண்டிருப்பவர்கள் இந்த சலுகையைப் பயன்டுத்தி இம்மாதத்திற்குள் அபராதத் தொகையை செலுத்திவிடும்படி ஷா ஆலம் மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கம் மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் மாநகர் மன்றத்தின் நிறைவு விழாவின் ஒரு பகுதியாக இந்த சலுகையை வழங்குகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்குள்ள செக்சன் 14இல் நடைபெற்ற ஷா ஆலம் வாகனமில்லா தின நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமியும் கலந்து கொண்டார்.