ஷா ஆலம், அக் 19- நீதிமன்ற வழக்கு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஆறு மாதச் சிறைத்தண்டனையும் 25,000 வெள்ளி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
அரசுத் தரப்பு கொண்டு வந்த குற்றச்சாட்டிற்கு எதிராக நியாயமான சந்தேகங்களை எதிர்த்தரப்பு எழுப்பத் தவறியதைத் தொடர்ந்து கோல குபு பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான அஸ்மில் முன்தாபா அபாஸ் (வயது 48) என்பருக்கு நீதிபதி ரஷியா கசாலி இத்தீர்ப்பை வழங்கினார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையை குற்றவாளி அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனையை ஒத்தி வைத்த நீதிபதி, ஜாமீன் தொகையை 6,000 வெள்ளியிலிருந்து 12,000 வெள்ளியாக உயர்த்தியதோடு இம்மாதம் 21ஆம் தேதிக்குள் மேல்முறையீட்டை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரின் வழக்கில் தாம் சம்பந்தப்பட்டுள்ளது தெரிந்தும் பிரதியுபகாரமாக 5,000 வெள்ளியை அவர்களிடமிருந்து பெற்றதாக அந்த முன்னாள் நீதிபதிக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது