ஷா ஆலம், அக் 25- கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நாட்டின் பொருளாதார நிலையில் வீழ்ச்சியை சந்தித்தாலும் சிலாங்கூரின் நிதி நிலை வலுவாகவும் போட்டியிடும் ஆற்றலுடனும் தொடர்ந்து விளங்கி வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 விழுக்காடாக இருந்த வேளையில் சிலாங்கூர் அதையும் தாண்டி 5.0 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இறைவன் அருளால் மாநிலத்தின் வருமானமும் பிரமிப்பூட்டும் வகையில் அதிகரித்துள்ளதோடு கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டிவிட்டது. இந்த வருமானம் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் வாயிலாக மக்களுக்கே திரும்ப வழங்கப்படும் என அவர் சொன்னார்.
சிலாங்கூர் அரசின் முயற்சியும் நோக்கமும் டாருள் ஏசான் மண்ணில் வசிக்கும் வசதி குறைந்த தரப்பினருக்கு உரிய பலனைக் கொண்டு வரும். பரிவுமிக்க சிலாங்கூர் மாநிலத்தை உருவாக்குவதே எங்களின் இலட்சியமாகும் என அவர் தெரிவித்தார்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிள்ளானில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் மகிழ்ச்சி தருணங்களையும அவர் தனது பேஸ்புக் பதிவில் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் இஸ்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் வாயிலாக அமல்படுத்தப்பட்டுள்ள 44 உதவித் திட்டங்களை அரசு நிறுவனங்களும் துறைகளும் இந்நிகழ்வில் காட்சிக்கு வைத்தன என்றார் அவர்.