சுபாங் ஜெயா, அக் 27- வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் அந்த பேரிடருக்குப் பிந்தைய மேலாண்மைப் பணிகளை கவனிக்க 56,000 வெள்ளியை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் ஒதுக்கியுள்ளது.
புதிய சாதனங்கள் கொள்முதல் செய்வது, குப்பைகளை அகற்ற பெரிய லோரிகள் மற்றும் மண்வாரி இயந்திரங்களை வாடகைக்கு எடுப்பது போன்ற காரணங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக சுபாங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.
கடந்தாண்டு வெள்ளம் ஏற்பட்ட போது வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை அகற்றுவதில் நாம் சிரமத்தை எதிநோக்கினோம். இதன் காரணமாக கடுமையான துர்நாற்றப் பிரச்னை ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
இதனால் பல தரப்பினரிடமிருந்து குறைகூறல்களுக்கும் புகார்களுக்கும் ஆளானோம். இம்முறை வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு நாம் முழு தயார் நிலையில் உள்ளோம் என்று இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இம்முறை வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக 50,000 வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் பேரிடர் நிதியை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்படும் போது தொடக்கப் பணிகளை கவனிப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.