கோல லங்காட், அக் 28- ஓ.ஜி. ஹோல்டிங்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஜி.எஸ். பேப்பர்போர்ட் அண்ட் பேக்கஜிங் காகித தொழிற்சாலை கோல லங்காட்டில் திறக்கப்பட்டதன் மூலம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் செயல்படத் தொடங்கிய 120 கோடி வெள்ளி முதலீட்டிலான இத்தொழிற்சாலை வட்டார மக்கள் மத்தியில் பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் முறை அதிகாரியுமான ஹிரியோக்கி இசோனோ கூறினார். இந்நிறுவனத்தை கடந்த 2010 ஆண்டில் கொள்முதல் செய்தது முதல் மலேசியாவில் தங்களின் முதலீட்டை வலுப்படுத்தியதோடு நாட்டின் மிகப்பெரிய காகித உற்பத்தியாளர் என்ற நிலையை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது வரை மலேசிய பொருளாதாரத்திற்கேற்ப 18 இடங்களில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளோம். காகித தயாரிப்பில் பிஎம்3 தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டார். சுற்றுவட்டார மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி அதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தங்களின் தலையாய நோக்கம் என்றும் அவர் சொன்னார். இந்த தொழிற்சாலையை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா நேற்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/10/Sultan5-1-960x623.jpg)