ஷா ஆலம், அக் 30- டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மந்திரி புசாராக இருந்த காலத்தை விட தற்போது மாநில அரசின் நிதிக் கையிருப்பு வலுவாகவே உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் அஸ்மின் மந்திரி புசாராக இருந்த போது மாநில அரசின் நிதிக் கையிருப்பு 210 கோடி வெள்ளியாக மட்டுமே இருந்ததாக அவர் சொன்னார்.
கடந்த 2018 இல் 80 கோடி வெள்ளி செலவினப் பற்றாக்குறையை நீங்கள் (அஸ்மின்) ஏற்படுத்தியதால், நிதிக் கையிருப்பு 210 கோடி வெள்ளியாக மட்டுமே இருந்தது. நாங்கள் 50 கோடி வெள்ளிக்கும் 60 கோடி வெள்ளிக்கும் குறையாமல் செலவிடுகிறோம் என அவர் தெளிவுபடுத்தினார்.
அவர் 210 கோடி வெள்ளியை மட்டும் கையிருப்பாக விட்டுச் சென்றார். ஆனால், மாநிலத்தின் நிதி 340 கோடி வெள்ளியாக உள்ளது. அஸ்மின் காலத்தை விட இது மிக அதிகமாகும் என்று சிலாங்கூர் மாநில ஹராப்பான் தலைவருமான அவர் தெரிவித்தார்.
அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் கோம்பாக் தொகுதியில் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை எதிர்த்து அமிருடின் ஷாரி போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் மாநிலம் தற்போது நிதிக் கையிருப்பு உள்பட பொருளாதார மந்த நிலையை எதிர்நோக்கியுள்ளதாக கூறியதன் வழி அஸ்மின் தொகுதி மக்களிடம் பொய்யுரைத்துள்ளதாக அமிருடின் குற்றஞ்சாட்டினார்.
மாநில அரசின் உயர் அதிகாரியிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் இந்த தகவலை தாம் கூறுவதாக அஸ்மின் கூறிய போதிலும் மாநில அரசு செயலாளரை அவர் தொடர்பு கொண்ட போது மாநில பொருளாதார தரவுகள் குறித்து எதுவும் கேட்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மாநில அரசு செயலாளரை அஸ்மின் தொடர்பு கொண்ட போது நான் அவரின் அருகில் இருந்தேன் என்ற விஷயம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை.
அந்த உரையாடலின் போது அஸ்மின் எந்த தரவையும் அரசு செயலாளரிடம் கேட்கவில்லை. இன்று அவர் மிகப்பெரிய பொய்யை நாட்டு மக்களிடமும் கோம்பாக் தொகுதி வாக்காளர்களிடமும் கூறுகிறார் என்றார் அவர்.
மாநிலத்தின் பொருளாதாரம் ஒருபோதும் சீர்குலையவில்லை என்றும் மாறாக, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.