கோலாலம்பூர், நவ 21- பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் அரசு ஊழியர்கள் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தங்களின் பணியை அர்ப்பணிப்புடனும் முழு ஈடுபாட்டுடனும் வழங்குவர் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கம் அமைப்பது தொடர்பில் மாட்சிமை தங்கிய மாமன்னர் இட்ட கட்டளையை ஏற்றும் தாங்கள் கடமையை செவ்வனே செய்து வருவதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி கூறினார்.
அணி சேரா கோட்பாட்டின் அடிப்படையிலும் நடப்பு அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும் பணியாற்றும் கடப்பாட்டை அரசு ஊழியர்கள் கொண்டிருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் நலனுக்காக தாங்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழியை கடைபிடிப்பதில் பொதுச் சேவை ஊழியர்கள் உறுதியாக உள்ளனர் என்று அவர் மேலும் சொன்னார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 82 இடங்களும் பெரிக்கத்தான் நேஷனலுக்கு 73 இடங்களும் தேசிய முன்னணிக்கு 30 இடங்களும் கிடைத்தன.