ஷா ஆலம், நவ 22- மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான சினமூட்டும் கருத்துகளை பரப்புவதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொது மக்களை போலீசார் எச்சரித்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயலும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த 15வது பொதுத் தேர்தல் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில் சமூக ஊடக பயனாளிகள் சிலர் இன, சமய மற்றும் விவகாரங்களை எழுப்புவதோடு ஆட்சியாளர்களையும் இழிவுபடுத்தி வருவதாக அவர் சொன்னார்.
இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு எதிராக 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடக சட்டம் மற்றும் குற்றவியில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் எச்சரித்தார்.