ஈப்போ, நவ 23; சன்வே சிட்டி நகரத்தில் நேற்று நடத்திய சோதனையில் போதைப் பொருள் கடத்தியதாக ஒரு பெண் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதிகாலை மணி 1 அளவில் நடத்தப்பட்ட சோதனையில் சன்வே சிட்டியில் உள்ள ஒரு வீட்டின் முன் உள்ள காரில் 35 மற்றும் 45 வயதுக்கிடையே உள்ள மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார்.
அக்காரிலிருந்து RM 713,300 மதிப்புள்ள 10.1 கிலோ மெத்தாம்பேட்டமைன் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, அவ் வீட்டில் நடத்திய சோதனையில் மேலும் 26 மற்றும் 48 வயதுடைய மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஏழு பேரில் நால்வர் மெத்தம்பேட்டமைன் உட்கொண்டுள்ளது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர்கள் மேல் இதற்கு முன் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் வேறு சில குற்றப் பதிவுகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
அந்த ஏழு பேரும் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக போதைப்பொருள் சட்டப்பிரிவு 39B இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க அந்த சட்டத்தில் இடமுண்டு.
-பெர்னாமா