ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் அரசின் நிதிக் கையிருப்பு 330 கோடி வெள்ளியைத் தாண்டியது

ஷா ஆலம், டிச 2- ஒருங்கிணைக்கப்பட்ட வருமான கணக்கு, அறங்காப்பு கணக்கு மற்றும் கடனுதவி கணக்கு ஆகியவற்றின் வாயிலாக சிலாங்கூர் மாநிலத்தின் நிதிக் கையிருப்பு இவ்வாண்டு அக்டோபர் 30ஆம் தேதி வரை 330 கோடி வெள்ளியைத் தாண்டியுள்ளது.

வரி விதிப்பு மூலம் பெறப்பட்ட நிதி, வரி அல்லாத வருமானம் ஆகியவற்றை வருமானக் கணக்கு உள்ளடக்கியுள்ளது என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

அடுத்தாண்டிற்கான செலவினம் மற்றும் மேம்பாட்டை அமல்படுத்துவதற்கு ஏதுவாக 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த நிதிக் கையிருப்பு அடிப்படையாக  கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

பொருளாதார மேம்பாடு, நிர்வாகச் செலவினம், இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பின் கீழ் மக்கள் திறன் மேம்பாட்டுத் திட்ட அமலாக்கம் மற்றும் பேரிடர் உதவித் திட்டங்களுக்கு இந்த நிதிக் கையிருப்பு பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

நிதிக் கையிருப்பின் மேலாண்மையும் திட்டமிடலும் மக்களின் நலனை அடிப்படையாக கொண்டிருக்கும் என்று மாநில சட்டமன்றத்தில் இன்று ஸ்ரீ கெம்பாங்கான் உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் கூறினார்.

நிச்சயமற்ற பொருளாதாரச் சூழல் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியிலும் கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் மாநிலத்தின் நிதிக் கையிருப்பு வலுவாக இருந்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.


Pengarang :