மலாக்கா, டிச 16- சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) இவ்வாண்டு டிசம்பர் 11ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 460 கோடி வெள்ளியை வசூலித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 15 ஜே.பி.ஜே. தலைமையக முகப்பிடங்கள், 66 கிளை அலுவலகங்கள், 22 நகர உருமாற்று மையங்கள் (யு.டி.சி.), நடமாடும் ஜே.பி.ஜே. முகப்பிடங்கள் மற்றும் ஜே.பி.ஜே. சுயசேவை இயந்திரங்கள் மூலம் இந்த அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாக சாலை போக்குவரத்து இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ ஜைலானி ஹஷிம் கூறினார்.
நாளொன்றுக்கு சராசரி 1 கோடியே 20 லட்சம் வெள்ளி வசூலிக்கப்படுவதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது. கடந்த அக்டோபர் மாதம் வரையிலான தரவுகளின் படி வாகனங்களுக்கான சாலை வரி புதுப்பிப்பு நடவடிக்கைகள் மூலம் 263 கோடி வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
அதனைத் தொடர்ந்து வாகனமோட்டும் லைசென்ஸ் மூலம் 48.3 கோடி வெள்ளியும் வாகன எண்களுக்கான ஏலம் மூலம் 42.1 கோடி வெள்ளியும் வாகனப் பதிவு மூலம் 13.4 கோடி வெள்ளியும் விசாரணை இல்லா தீர்வு மூலம் 11.9 கோடி வெள்ளியும் வசூலிக்கப்பட்டது என்றார் அவர்.