கோல திரங்கானு, டிச. 30- திரங்கானு மாநிலத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் அம்மாநிலத்தில் வெள்ளத்திற்குப் பிந்தைய நிவாரணப் பணிக்கு சிலாங்கூர் தன்னார்வலர்கள் (செர்வ்) அனுப்பப்படவில்லை என்று மந்திரி புசார் கூறினார். இருப்பினும், அடுத்த ஜனவரி தொடக்கத்தில் ஏற்படக்கூடிய இரண்டாம் கட்ட வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களின் போது எந்த நேரத்திலும் உதவ தாங்கள் தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இந்த மாநிலத்தில் உள்ள ஊராட்சி நிர்வாகத்தைச் சந்தித்தோம். கிட்டத்தட்ட முழு பகுதியும் சுத்தம் செய்யப்பட்டு விட்டதால் வெள்ளத்திற்குப் பிந்தைய துப்புரவு பணிக்கு உதவி தேவை இல்லை என்று அவர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். ஆனால்,கிளந்தானில் நிலைமை வேறு மாதிரி உள்ளது. ஏனென்றால் ரந்தாவ் பஞ்சாங்கில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. இயந்திரங்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து நடவடிக்கையில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார். இன்று இங்குள்ள ஸ்ரீ இமானில் திரங்கானு மந்திரி புசார் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது சம்சூரி மொக்தாரிடம் சிலாங்கூர் அரசின் 500,000 வெள்ளி உதவி நிதியை வழங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்கிழமை, அமிருடின் மாநில அரசின் 500,000 வெள்ளி நன்கொடையை நன்கொடையை கிளந்தான் மந்திரி புசார் டத்தோ அகமது யாக்கோப்பிடம் வழங்கினார். டிசம்பர் 20 அன்று, டத்தோ மந்திரி புசார் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் அரசாங்கம் கிளந்தான் மற்றும் திரங்கானுவிற்கு 10 லட்சம் வெள்ளியை நன்கொடையாக வழங்கும் என்று அமிருடின் கடந்த 20ஆம் தேதி அறிவித்திருந்தார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/12/P-Sumbangan-Bantuan-Banjir-9-960x640.jpg)