ஷா ஆலம், ஜன 1- ஜெண்டேராம் ஹிலிர் கச்சா நீர் பம்ப நிலையப் பகுதியில் நேற்று மாலை கண்டறியப்பட்ட நீர் மாசுபாடு பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. கடந்த மாதம் 24ஆம் தேதி நெகிரி செம்பிலானில் நிகழந்த சாலை விபத்தில் சிக்கிய லோரி ஒன்றிலிருந்து கசிந்த வாசனை திரவியம் வடிகால்கள் வழியாக வழிந்தோடி சுத்திகரிப்பு மையத்திற்குச் செல்லும் நீரில் கலந்து மாசுபாட்டை ஏற்படுத்தியது.
நீரில் வாசனை திரவியத்தின் வாடை கலந்த காரணத்தால் நிறுத்தப்பட்ட சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நேற்றிரவு மீண்டும் தொடங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
செமினி நீர் சுத்திகரிப்பு மையத்தின் நுழைவாயில் பகுதியில் நேற்றிரவு 11.00 மணிளவில் பல முறை மேற்கொள்ளப்பட்ட நீர் மணச் சோதனையின் முடிவுகள் சுழியத்தைக் காட்டியதாக அவர் சொன்னார்.
இதன் மூலம் அப்பகுதியில் ஏற்பட்ட நீர் மாசுபாடு பிரச்சனை தீர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு நீர் சுத்திகரிப்பு மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறினார்.
நீரில் வாடை கண்டறியப்பட்டதன் எதிரொலியாக அந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நான்கு மணி நேரத்திற்கு மட்டுமே மூடப்பட்டதால் இதனால் ஏற்படக்கூடிய நீர் விநியோக பாதிப்பும் மிகவும் குறைவாகவே இருக்கும் என்றார் அவர்.
கடந்த மாதம் 24ஆம் தேதி இலிட் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தினால் வடிகால்களில் கசிந்த வாசனை திரவியம் காரணமாக சுத்திகரிப்பு மையத்திற்கு செல்லும் நீர் ஆதாரங்களில் மாசுபாடு ஏற்பட்டுள்ளதை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் கண்டறிந்தது.