ஷா ஆலம், ஜன 7– மாநிலத்திலுள்ள 200 அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் 500,000 எல்.இ.டி. விளக்குகளை இவ்வாண்டில் பொருத்த சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
இது தவிர, முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் மாநில அரசு வரையறுத்துள்ள கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் முயற்சிக்கேற்பவும் இந்நடவடிக்கை அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.
தற்போது வரை 237 அடுக்குமாடி குடியிருப்புகளில் 555,581 எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்துவதற்கான ஆய்வினை தாங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த எல்.இ.டி. விளக்கு பொருத்தப்பட்ட இடங்களில் மின்சாரக் கட்டணம் 49 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.
சொத்துடைமை துறைகளில் பருவ நிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கு ஏதுவாக அனைத்து கட்டிடங்களிலும் எல்.இ.டி. மற்றும் சோலார் விளக்குகளைப் பொருத்துவது, மழைநீர் வீடமைப்பு முறையை அமல்படுத்துவது போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று ரோட்சியா கடந்த மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறியிருந்தார்.