கோலாலம்பூர், பிப் 1- கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு டத்தோஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற இந்த விருதளிப்பு நிகழ்வில் 164 பேருக்கு உயரிய விருதுகள், பட்டங்கள் மற்றும் பதக்கங்களை மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா வழங்கினார்.
இந்த விருதளிப்பு நிகழ்வில் ராஜா பெர்மைசூரி அகோங், துங்கு ஹாஜா அஜிசான அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் கலந்து கொண்டார்.
மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் மற்றும் அமைச்சர்கள் இந்த விருதளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
வேளாண்மை மற்றும் உணவு உத்தரவாதத் துறை அமைச்சரான முகமது சாபு விருது பெறுவோர் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தார்.
டத்தோஸ்ரீ அந்தஸ்தை தாங்கிய ஸ்ரீ மக்கோத்தா விலாயா விருதை இதர ஆறு பிரமுகர்களோடு 69 வயதான முகமது சாபுவும் பெற்றுக் கொண்டார்.