ஷா ஆலம், மார்ச் 18. கிள்ளானில் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 4,520 குடும்பங்களுக்கு மொத்தம் 11 லட்சத்து 65,000 வெள்ளி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கம்போங் புடிமான், மேரு, தாமான் மெலாவிஸ் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 500 வெள்ளி வழங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மொத்தம் 11 லட்சத்து 65 ஆயிரம் வெள்ளியை உள்ளடக்கிய இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு கிள்ளான் மாவட்ட மற்றும் நில அலுவலகத்திடம் ஒப்படைத்தது. அந்த நிதி கட்டங் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களிடம் வழங்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனிடையே, பெடுலி ராக்யாட் திட்டம் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் என மறுபெயரிடப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ஐ.பி.ஆர். எனும் பெடுலி ராக்யாட் விவேக முன்னெப்பு முறை சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படும் என்றும் அமிருடின் தெரிவித்தார்.
மத்திய அரசின் ரஹ்மா ரொக்க உதவித் திட்டம் மற்றும் சிலாங்கூர் அரசின் பிங்காஸ் எனப்படும் மக்கள் நல்வாழ்வு உதவித் திட்டங்களை ஒருங்கிணைப்பது குறித்தும் மாநில அரசு ஆலோசித்து வருகிறது என்று அவர் சொன்னார்.