கோலாலம்பூர், ஏப் 28- துருக்கிய அதிபர் ரிகேப் தாயிப் எர்டோகன் பலமும் நல்ல உடலாரோக்கியமும் பெற தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அதிபர் எர்டோகனை தொலைபேசி வழி தொடர்பு கொள்வதற்கு தமக்கு வாய்ப்பு கிடைத்ததாக பிரதமர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் (அதிபர்) தற்போது உடல் நலம் தேறி வருகிறார். தமக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார் என அன்வார் சொன்னார்.
கடந்த புதன் கிழமை உள்ளுர் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த போது அதிபர் எர்டோகனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு பேட்டி தடைபட்டதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அதிபர் எர்டோகனுக்கு இரைப்பை குடல் அழற்சி ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதிபர் தேர்தல் பிரசாரத்தில் எர்டோகன் மும்முரமாக உள்ளதால் இந்த பேட்டி பின்னிரவில் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.