ஷா ஆலம், ஏப் 28- நோன்புப் பெருநாள் காரணமாக கடந்த ஆறு நாட்களாக
மூடப்பட்டிருந்த சிலாங்கூர் ஃபுரூட் வெளி (எஸ்.எஃப்.வி.) நாளை முதல்
வழக்கம் போல் செயல்படும்.
இந்த வேளாண் சுற்றுலா மையம் பொது விடுமுறை தினமான மே முதல்
தேதியும் திறந்திருக்கும் என்று எஸ்.எஃப்.வி. தனது பேஸ்புக் பதிவில்
குறிப்பிட்டுள்ளது.
அன்பு வாடிக்கையாளர்களே, நாங்கள் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி
சனிக்கிழமை மீண்டும் செயல்படவுள்ளோம். மே முதல் தேதியும் இந்த
சுற்றுலா மையம் திறந்திருக்கும் என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
பெஸ்தாரி ஜெயாவில் இந்த எஸ்.எஃப்.வி. மையம் அமைந்துள்ளது. சுமார்
1,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில்
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொழுது போக்கு வசதிகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இருபது வகையான பழங்கள், காய்கறிகள் இந்த மையத்தில்
பயிரிடப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவின் மிகப்பெரிய தேன் உற்பத்தி
மையாகவும் இது விளங்குகிறது.
இந்த மையத்தில் உள்நாட்டைச் சேர்ந்த சிறார்களுக்கு 15.00 வெள்ளியும்
பெரியவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 20.00 வெள்ளியும் நுழைவுக்
கட்டணமாக விதிக்கப்படுகிறது. வெளிநாட்டு சற்றுப்பயணிகளுக்கு 35.00
வெள்ளியும் சிறார்களுக்கு 30 வெள்ளியும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.