சிப்பாங், ஏப் 29- வசதி குறைந்த தரப்பினருக்கு உதவுவதற்காக சிலாங்கூர் மாநில அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில அரசு அமல்படுத்தியுள்ள உதவித் திட்டங்களில் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம் (பிங்காஸ்) இலவச குடிநீர் உதவித் திட்டம் மற்றும் இன்சான் எனப்படும் சிலாங்கூர் பொது காப்புறுதித் திட்டம் ஆகியவையும் அடங்கும் என்று அவர் சொன்னார்.
இத்தகைய தரப்பினருக்கு உதவிகளை வழங்குவதில் நாம் தாமதம் காட்டவில்லை. சுமார் 5 கோடி வெள்ளி ஒதுக்கீட்டிலான பிங்காஸ் திட்டத்தின் மூலம் 30,000 பேர் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இலவச குடிநீர் திட்டம், மருத்துவப் பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட திட்டங்களையும் மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் யாவும் தொடர்ந்து அமல்படுத்தப்படுகின்றன. இவை யாவும் வெறும் ஜனரஞ்சக திட்டங்கள் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
இன்சான் காப்புறுதித் திட்டத்தை எடுத்துக் கொண்டால் சிலாங்கூர் தவிர வேறு எந்த மாநிலமும் மக்களுக்கு இத்தகைய திட்டத்தை அமல்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை என்றார் அவர்.
இங்குள்ள பெக்கான் சாலாக்கில் நேற்றிரவு நடைபெற்ற சிப்பாங் மாவட்ட நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.